இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
படையினரின் பலத்த பாதுகாப்போடு கொட்டகலையிலிருந்து ஹட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்குக்குக் கொண்டுவரப்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியைப் பேணி நின்று மலர் தூவி கண்ணீர்மல்க அஞ்சலியை செலுத்தினர்.
இறுதி அஞ்சலி நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவர் வி.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமார, சிவனொளிபாதமலை பிரதான தேரர் மற்றும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.